செய்திகள்
நில மோசடி

அழகர்கோவில் நிலத்தை ரூ.14 லட்சத்திற்கு விற்று மோசடி - போலீசார் தீவிர விசாரணை

Published On 2021-11-27 08:03 GMT   |   Update On 2021-11-27 08:03 GMT
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.14 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை வண்டியூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி ரகு (வயது 31).

இவரை சமீபத்தில் நேரில் சந்தித்த காமராஜர் நகரைச் சேர்ந்த செண்பகராமு என்பவர் “எனக்கு வண்டியூரில் சொந்தமாக நிலம் உள்ளது. இதனை 14 லட்சம் ரூபாய்க்கு விற்க விரும்புகிறேன். நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டு உள்ளார்.

உடனே ராஜபாண்டி ரகுவும் பல்வேறு தவணைகளில் 14 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து உள்ளார். இருந்த போதிலும் செண்பகராமு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. ‘அதோ தருகிறேன், இதோ தருகிறேன்’ என்று கூறி இழுத்தடித்து வந்தார்.

இதனால் ராஜபாண்டி ரகுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட நிலத்தின் பத்திர ஆவணங்களை சோதனை செய்து பார்த்தார். அப்போது அந்த நிலம் மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டி, இதுதொடர்பாக செண்பகராமுவிடம் நியாயம் கேட்டார். இதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே ராஜபாண்டி ரகு கொடுத்த ரூ.14 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டார். அதற்கு செண்பகராமு மறுத்து விட்டார்.

ராஜபாண்டி ரகு இது தொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News