செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர் மாநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
திருப்பூர்’:
தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. திருப்பூரில் நேற்றிரவு முதல் லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இன்று காலை வரை நீடித்தது.
திருப்பூர் மாநகரில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. இதே போல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இன்று காலை 7 மணி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:
திருப்பூர் வடக்கு-9, அவினாசி -14, பல்லடம்-12, ஊத்துக்குளி-18, காங்கேயம்-28, தாராபுரம்-60, மூலனூர்-34, குண்டடம்-40, திருமூர்த்தி அணை-55, அமராவதி அணை-60, உடுமலை-54, மடத்துக்குளம்-46, கலெக்டரேட்-8, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்-14.20, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -57.20, திருப்பூர் தெற்கு 6, கலெக்டரேட் முகாம் அலுவலகம் -25.50.மாவட்டத்தில் மொத்தம் 540.90 மி.மீ. மழை பெய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி மற்றும் இறவை பாசனங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதிகளில் நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியவை பருவ மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை ஒரு மணி நேரம் பெய்து வருகிறது. இதனால் மானாவாரி சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
4,388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 5ஆயிரம் கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை குளிப்பாட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.