செய்திகள்
குடிமங்கலம் பகுதியில் இலக்கு வைத்து பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல்
இனவிருத்தி செய்ய ஆயிரம் பசுக்களுக்கு ஒரு காளை மட்டுமே உள்ள நிலை காணப்படுகிறது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை கால்நடை மையங்கள் செயல்படுகின்றன.
ஆனால் இனவிருத்தி செய்ய போதிய எண்ணிக்கையில் காளை மாடுகள் கிடையாது. இதனால் மாதம்தோறும் இலக்கு நிர்ணயித்து செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:
இனவிருத்தி செய்ய ஆயிரம் பசுக்களுக்கு ஒரு காளை மட்டுமே உள்ள நிலை காணப்படுகிறது. இதனால் கலப்பின வகைகளை உருவாக்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதை தவிர்க்கவே கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது.
இதற்காக காளை மாடு பண்ணைகளில் இருந்து உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு உயிரணுக்கள் சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. பின் அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு தேவையான அளவில் அனுப்பப்படுகிறது.
உடுமலை கோட்டத்தில் மாதம்தோறும் 200 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயித்து கருவூட்டல் செய்யப்படுகிறது. கர்ப்பப்பை வளர்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய உடல் அமைப்பை பெறுவதற்கு எல்லா சத்துக்கள் நிறைந்த தாது உப்புகளும் பசுக்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.