செய்திகள்
கோப்புப்படம்

காஞ்சிபுரத்தில் ரவுடிகள் மோதலில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-11-18 11:13 GMT   |   Update On 2021-11-18 11:13 GMT
காஞ்சிபுரத்தில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் ஆதரவாளர்களான தினேஷ் ஒரு கோஷ்டி ஆகவும் தணிகா ஒரு கோஷ்டி ஆகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக எம்.சுதாகர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். பல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ரவுடிகளுக்கிடையேயான மோதலில் காஞ்சிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்று நேற்று இரவு மர்ம கும்பல் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை தடுக்க முயன்ற பிரபுவின் மகன்கள் கமலேஷ், ஜெகன்நாதன் ஆகிய 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களில் கமலேஷ் கல்லூரி மாணவர் ஆவார். அவருக்கு தலையிலும், இடது கையிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். பலத்த வெட்டு காயம் அடைந்த கமலேசும், ஜெகன்நாதனும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அதேபகுதி சாலை தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கும்பல் கடையின் முன்பகுதியை அடித்து நொறுக்கி விட்டு பொருட்களை சேதப்படுத்தி தப்பினர்.

சிறுவாக்கம் பகுதியில் ஏரிக்கரை அருகே மீன் ஏலம் விடுவதில் ஏற்பட்ட மோதலில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் ராஜமன்னார் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த 3 சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டதாக தெரிகிறது. ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News