பொங்கல் தொகுப்புடன் பரிசு பணமும் வழங்க வேண்டும் - பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை:
பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசு பணமும் அரசு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம்.
ஆனால் தி.மு.க. அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கல் தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை.
அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் எனறு தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...முதல்-அமைச்சரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி