செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1040 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-11-18 09:39 GMT   |   Update On 2021-11-18 09:39 GMT
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தொடர்மழை காரணமாக ஏரி வேகமாக நிரம்பியதால் கடந்த 7-ந் தேதி முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக 2000 கன அடி வரை தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டது.

பின்னர் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று முன்தினம் உபரி நீர் திறப்பு 250 கன அடியில் இருந்து 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஏரிக்கு 1040 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2804 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 20.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

ஏரியில் இருந்து உபரி நீர் 2151 கன அடி வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News