செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள பகுதி

தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும்- மீனவர்கள் செல்ல வேண்டாம்

Published On 2021-11-18 09:04 GMT   |   Update On 2021-11-18 10:42 GMT
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்.



இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள்,  பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

இன்று தென்மேற்கு வங்கக்கடல், தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல் நாளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்  கூறினார்.

Tags:    

Similar News