செய்திகள்
கைது

செல்போனில் பேச்சு: மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

Published On 2021-11-16 09:06 GMT   |   Update On 2021-11-16 09:06 GMT
செல்போனில் பேசுவது குறித்து ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

ராமாபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (23) தனியார் மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

சவுந்தர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சவுந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவை பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு சந்தியா வேலைக்கு சென்று விட்டு செல்போனில் பேசியபடியே வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தியாவை வழிமறித்த சவுந்தர் “யாருடன் போனில் பேசுகிறாய்” என்று கேட்டு சந்தியாவின் செல்போனை பறிக்க முயன்றார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சவுந்தர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சத்தியாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட 5 இடங்களில் கத்திக்குத்து பட்டு படுகாயமடைந்த சந்தியா ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News