செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

உடுமலை பகுதியில் நெற்பயிர்களை வேகமாக தாக்கும் குலைநோய் - அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

Published On 2021-11-15 07:34 GMT   |   Update On 2021-11-15 07:34 GMT
கடந்த ஜூலை மாதம் அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது.
உடுமலை:

உடுமலை அடுத்த அமராவதி அணையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. மழை பெய்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெற்பயிர்களில் பழநோய் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஜூலை மாதம் அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தவுடன் அதில் கதிர்கள் பிடித்து பழுக்கும் தருவாயில் உள்ளது. இன்னும் 15 நாட்களில் அறுவடை பணிகளை தொடங்கி விடலாம்.

அதற்குள்ளாக அமராவதி, கல்லாபுரம் பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் குலை நோய் மற்றும் பழநோய் தாக்குதல் நெற்பயிர்களைத் வேகமாக தாக்கி வருகிறது. 

ஒரு சில விவசாயிகளை தவிர மற்றவர்கள் மழையின் காரணமாக மருந்து தெளிக்க இயலவில்லை. இதனால் அசுர வேகத்தில் அதன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஒரு ஏக்கரில் பாதி அளவு சேதம் ஏற்படக்கூடிய சூழல் நிலவுகிறது. 

இதனால் முதலீடாக செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமராவதி, கல்லாபுரம் பகுதியில் ஆய்வு செய்து குலை மற்றும் பழநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் முன் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
Tags:    

Similar News