செய்திகள்
வாக்காளர் பட்டியல்

நாளை வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

Published On 2021-11-12 16:05 IST   |   Update On 2021-11-12 16:05:00 IST
வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 1,215 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்காக அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 1,215 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் வந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் NVSP எனும் இணையதளம், Voters Help Line எனும் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேசலாம், என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News