செய்திகள்
வடகிழக்கு பருவமழை - திருப்பூரில் நீர்நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டுகோள்
மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர் நிலைகளைத் தூர்வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைதல், பருவநிலை மாற்றங்கள், பருவமழை பொய்த்தல் போன்ற காரணங்களால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.
பல பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளும் அதிகரிக்கின்றன. குறிப்பாக தூர்வாரப்படாத பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை கொட்டப்பட்டும் தூர்ந்து போயுள்ளன.வறட்சி நிலவும் சூழ்நிலையில் மட்டுமே நீர்நிலைகளை தூர்வாரி அதனை முறையாகப் பராமரிக்க, துறை ரீதியான அதிகாரிகள் முயற்சி மேற்கொள்கின்றனர்.
தற்போது மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர் நிலைகளைத் தூர்வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
தூர்ந்து போன நிலையில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடுகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் தேங்காமல் போவதால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதில்லை.காலம் கடந்தாலும் நீர் நிலைகளின் அவசியத்தை உணர்ந்து அதனை மீட்டெடுக்க வேண்டும்.
நீர்நிலைகளை தூர்வாரி நீர்வழித்தடங்களை செப்பனிட்டு நீர்வளம் மிக்க பகுதிகளை பாதுகாக்க அரசு அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என்றனர்.