செய்திகள்
அரிசி

வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-11-08 15:34 GMT   |   Update On 2021-11-08 15:34 GMT
வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி,  தொன்போஸ்கோ நகர் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த மினிலாரியை பிடித்து விசாரணை நடத்தினர். டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் திருப்பத்தூர் எல்.ஐ.சி. பின்புறம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த லோகநாதன் (வயது42) என்பதும், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதிக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.

மேலும் இவருடன் தாமு என்ற வெங்கடேசன், அண்ணாமலை ஆகியோருடன் சேர்ந்து ரேஷன் கடத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் தாமு என்ற வெங்கடேசன், அண்ணாமலையை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News