செய்திகள்
திருமூர்த்தி அணை நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

நீர்வரத்து அதிகரிப்பால் திருமூர்த்தி அணை தீவிர கண்காணிப்பு

Published On 2021-11-08 09:34 GMT   |   Update On 2021-11-08 09:34 GMT
பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை அருகே திருமூர்த்திமலையில்  கடந்த சில நாட்களாக  பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மலைத்தொடரில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  பஞ்சலிங்க அருவி  ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்றுமுன்தினம் மலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மலைத்தொடரில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவிக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தளி போலீசார், சாம்பல் மேடு பகுதியில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து திருமூர்த்திமலைக்கு செல்லும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கோவில் பகுதியில் இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நேற்று  மழை இல்லாத நிலையில்  சிற்றாறுகளில், அதிக நீர் வரத்து காரணமாக பஞ்சலிங்க அருவியில்  வழக்கத்தை விட கூடுதலாக நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.தற்போதைய நிலவரப்படி, திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 979 கன அடி நீர் வரத்து உள்ளது.

அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
Tags:    

Similar News