செய்திகள்
குழந்தை (கோப்புப்படம்)

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாளே ஆன குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற தாய்

Published On 2021-11-06 08:51 GMT   |   Update On 2021-11-06 08:51 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி செல்வராணி (வயது 25). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்த நிலையில் இன்று காலை திடீரென குழந்தை மட்டும் அழுது கொண்டு இருந்தது. அருகில் இருந்த பெண்கள் செல்வராணியை தேடிப்பார்த்தனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. செவிலியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அந்தக் குழந்தையை மீட்டு சிசு பராமரிப்பு மையத்தில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை விட்டுச் சென்ற தாய் குறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நத்தம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு செல்வராணியை தேடி வருகின்றனர்.

அவர் உண்மையிலேயே கோசுகுறிச்சியைச் சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியைச் சேர்ந்தவரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 நாளான குழந்தையை தவிக்க விட்டு தாய் சென்ற சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News