செய்திகள்
சந்தையில் மாடுகள், எருமை கன்று, பசு கன்றுகள் வரத்து அதிகமாக இருந்ததை படத்தில் காணலாம்.

ஓமலூர் அருகே இன்று ஒரே நாளில் மாட்டு சந்தையில் ரூ.11 கோடிக்கு வர்த்தகம்

Published On 2021-11-05 15:45 IST   |   Update On 2021-11-05 15:45:00 IST
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இன்று கூடிய சந்தையில் மாடுகள், எருமைகள் மற்றும் வளர்ப்பு கன்றுகளின் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெருமாள்கோவில் கிராமத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மாட்டு சந்தை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல சேலம் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. அதனால் இன்று கூடிய சந்தையில் மாடுகள், எருமைகள் மற்றும் வளர்ப்பு கன்றுகளின் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

உள்ளூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். வளர்ப்பு பசு கன்றுகள், எருமை கன்றுகளை விவசாயிகள் வளர்ப்பதற்காக வாங்கி சென்றனர். கேரளா, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநில வியாபாரிகள் அதிக அளவில் மாடுகள் வாங்கி சென்றனர்.

கன்றுக்குட்டிகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலும், எருமை மற்றும் காளை ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தைவிட ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கூடுதலான விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதனால், இன்று கூடிய சந்தையில் 11 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News