செய்திகள்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பஞ்சு-நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்-ஏற்றுமதியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மத்திய அரசு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அவசர செயற்குழு சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஏற்றுமதி யாளர்கள் அவசர தேவையின்றி நூல் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்.
சில நாட்களில் புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது நூல் விலை சீராகிவிடும். நூல் விலை அக்சசரீஸ், ஜாப்ஒர்க் கட்டணங்கள், தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாளர்கள் வெளி நாட்டு வர்த்தகரிடம் ஆடை விலையை உயர்த்தி பெறவேண்டும்.
உலகம் முழுவதும் இந்த அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே ஆடைக்கு நிச்சயம் விலை உயர்வு கிடைக்கும். மத்திய அரசு பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
பஞ்சு, நூல் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிடவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.