செய்திகள்
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் -கோவில்களில் சிறப்பு வழிபாடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து வணங்குவார்கள்.
பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவர்.
அவ்வகையில் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியது. காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.
தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
#WATCH Effigy of 'Narakasura' burnt in Goa's Panaji early morning today, as part of #Deepawali celebrations pic.twitter.com/k5XhDovfEQ
— ANI (@ANI) November 4, 2021
நரகாசுரன் கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவுபடுத்தும் வகையில், வடமாநிலங்களில் நரகாசுன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடுகின்றனர். கோவா மாநில தலைநகர் பனாஜியில் இன்று நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இருந்தபோதிலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து பலர் இன்னும் மீளவில்லை. எனவே ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் எளிமையாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் செல்வதை பார்க்கமுடிகிறது.
இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.