செய்திகள்
கோப்புப்படம்

கோவை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2021-11-02 10:20 GMT   |   Update On 2021-11-02 10:20 GMT
கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கோவில்பாளையம் மரக்கடை வீதி 2-வது வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது55). இவர் அந்த பகுதியில் சொந்தமாக உரக்கடை வைத்து விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்து வருகிறார்.

இவரது மனைவி தேன்தமிழ் பாரதி(52). கணவன், மனைவி 2 பேரும் சம்பவத்தன்று வெள்ளமடை அடுத்த கோவில்தோட்டம் பகுதியில் உள்ள தங்களது மற்றொரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

கோவில்பாளையம்- வேளமடை ரோட்டில் சென்றபோது இவர்களை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் மர்மநபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக இயக்கி வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் அருகே வந்தனர்.

அருகே வந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தேன்தமிழ் பாரதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் வெங்கடேசன் தனது மனைவியுடன் கீழே விழுந்தார். இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருடன்.. திருடன்... என சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து வெங்கடேசன் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News