செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2021-10-31 10:45 IST   |   Update On 2021-10-31 10:45:00 IST
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 26-ந் தேதி தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் குறைந்த உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வந்தது. நேற்று இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. காலை நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலைகளில் செல்வதை காண முடிந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே வாலாஜா ஏரி நிரம்பி உள்ளது. நத்தமேடு அணைக்கட்டு, சிப்பம் ஏரி, உளுத்தூர் அணைகட்டு, அம்மாபுரம் அணைக்கட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 21 ஏரி மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி உள்ளன.

மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஏரி மற்றும் அணைகட்டுகளில் 76 முதல் 99 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இது தவிர 27 ஏரி, குளங்களில் 51 முதல் 75 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருவதால் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.

Similar News