செய்திகள்
உயிரிழப்பு

திருமணமான 10 மாதத்தில் கர்ப்பிணி பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-10-28 15:27 IST   |   Update On 2021-10-28 15:27:00 IST
புனிதவள்ளியின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் ரெட்டியூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புனிதவள்ளி (வயது 24) இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுதம்ராஜா என்பவரை திருமணம் செய்தார். புனிதவள்ளி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் சிதம்பரம் கீழ மூங்கிலடி அடுத்த பாலுத்தாங்கரையில் உள்ள தனது தாய் வீட்டில் புனித வள்ளி இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள பின் வாசலுக்கு செல்வதாக புனிதவள்ளி கூறிச் சென்றார். ஆனால் புனிதவள்ளி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது வயலில் மயங்கிய நிலையில் புனிதவள்ளி விழுந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் புனிதவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது.

இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புனித வள்ளியின் தாய் கோமதி புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புனிதவள்ளியின் இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News