செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி மணல் லாரி டிரைவர் மரணம்

Published On 2021-10-28 08:09 GMT   |   Update On 2021-10-28 08:09 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் மின்சாரம் தாக்கியதில் மணல் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாளையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் பாலாஜி (வயது 24). இவர் மணல் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

இன்று அதிகாலை பாலாஜி பாளையம்பட்டி கிழக்கு தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு லாரியில் மணல் கொண்டு வந்தார். அங்கு மணலை கொட்டிய பின் லாரியை மற்றொருவர் இயக்க, பாலாஜி பின்னால் நின்று வழி சொல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை பாலாஜி எதிர்பாராத விதமாக மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பாலாஜி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இறந்த பாலாஜியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
Tags:    

Similar News