செய்திகள்
செல்போன் டவரில் ஏறி அ.ம.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல்

செல்போன் டவரில் ஏறி அ.ம.மு.க. தொண்டர் தற்கொலை மிரட்டல் - எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

Published On 2021-10-24 14:57 IST   |   Update On 2021-10-24 14:57:00 IST
ராஜபாளையத்தில் சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அமமுக தொண்டர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர், 22-வது வார்டு அ.ம.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுந்தர்ராஜ் இன்று காலை அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் வேகமாக ஏறினார். பின்னர் செல்போன் டவர் உச்சியில் நின்றுகொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கிராமமக்களும் அங்கு திரண்டனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்ராஜனிடம் மைக் மூலம் சமரச பேச்சு நடத்தினார்கள். டவரை விட்டு கீழே இறங்கி வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் சுந்தர்ராஜ் கீழே இறங்காமல் அடம் பிடித்து வந்தார்.

சுமார் 1½ மணி நேர சமரசத்திற்கு பிறகு சுந்தர்ராஜ் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.ம.மு.க. தொண்டர் நடத்திய இந்த போராட்டத்தால் ராஜபாளையத்தில் இன்று பரபரப்பு ஏற்படுத்தியது.

Similar News