செய்திகள்
கொலை

கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி

Published On 2021-10-22 10:33 IST   |   Update On 2021-10-22 10:33:00 IST
மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை, மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45), டிரைவர்.

இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 8 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டார்.

நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜாராம் மனைவியிடம் சண்டை போட்டார். இதில் ஆத்திரமடைந்த மனைவி ரேவதி, அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராமை சரமாரியாக தாக்கினார்.

தலையில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் ராஜாராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜாராமின் தாய் ராஜம்மாள் (67) அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை, மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News