செய்திகள்
கைது

கிருஷ்ணன்கோவிலில் இரிடியம் மோசடி- 5 பேர் கைது

Published On 2021-10-21 10:29 GMT   |   Update On 2021-10-21 10:29 GMT
கிருஷ்ணன்கோவிலில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 4 பேர் நின்றிருந்தனர். அவர்கள் கையில் பெரிய அளவிலான அட்டை பெட்டியும் இருந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களது பெயர் கோவிந்தராஜ் (வயது 35), கண்ணன் (44), கணேச மூர்த்தி (42), கோபிநாத் (29) என தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியில் பித்தளை பாத்திரங்கள் இருந்தன. இதுதொடர்பாக விசாரித்தபோது, தென்காசி மாவட்டம் கடைய நல்லூரைச் சேர்ந்த அய்யாச்சாமி (72) என்பவர் பழைய பித்தளை பாத்திரங்களை கொண்டு வந்தால் அதில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடியாக விற்று பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.

அதனை நம்பி பித்தளை பாத்திரங்களை கொண்டு செல்வதாக 4 பேரும் தெரிவித்தனர். மேலும் கிருஷ்ணன்கோவில் விடுதியில் அய்யாச்சாமி தங்கி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட விடுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக அய்யாச்சாமி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News