செய்திகள்
கொலை

விருதுநகர் அருகே பெண் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-10-19 16:31 IST   |   Update On 2021-10-19 16:31:00 IST
விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கொலை செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி செந்திலா.

மனைவியின் நடத்தையில் விஜயகுமார் சந்தேகப்பட்டதால் அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் செந்திலா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் விஜயகுமாருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயவீரன்-மாரியம்மாள் (53), மகன் ஜெகதீசனுக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் ஜெகதீசனை கத்தியால் விஜயகுமார் குத்தனார்.

இதுதொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த அவர், ஜெகதீசனின் தாயார் மாரியம்மாளிடம், தனது மனைவி பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம் என கூறி தகராறில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஜெயவீரன் வீட்டின் மாடியில் தூங்கினார். மாரியம்மாள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டது.

திடுக்கிட்டு எழுந்த ஜெயவீரன் அவசரமாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மாரியம்மாள் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகில் விஜயகுமார் அரிவாளுடன் நின்றிருந்தார்.

தனது மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமாக இருந்ததால் மாரியம்மாளை வெட்டிக்கொன்றதாக கூறி விட்டு விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

Similar News