செய்திகள்
கைது

சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2021-10-12 07:32 GMT   |   Update On 2021-10-12 07:32 GMT
சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையம் நால் ரோட்டில் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் அவினாசி நீலிபாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 37), புஞ்சைபுளியம்பட்டி அண்ணாநகரை சேர்ந்த குமார் என்கிற சித்திரைகுமார் (42) ஆகியோர் என்பதும், இவர்கள் ஈரோட்டில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி சென்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News