செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-10-06 09:11 GMT   |   Update On 2021-10-06 09:11 GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
ஈரோடு:

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணை 102 அடியை தொட்டதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். இவ்வாறு பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,607 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 300 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

102 அடியை எட்டி உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News