செய்திகள்
விஷம்

குடி பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு- காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2021-10-04 10:54 GMT   |   Update On 2021-10-04 10:54 GMT
கணவரின் குடி பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நயினாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 28). இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு முனீஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர்.

முனீஸ்வரன் அடிக்கடி மது குடித்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணவேணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்குமார் (27). தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சர்மிளா (21). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

முனீஸ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததை சர்மிளா கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த முனீஸ்குமார் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனீஸ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சுழி அருகே உள்ள இருஞ்சிறையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40), கட்டிட தொழிலாளி. இவர் அடிக்கடி குடித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

இதில் மனவேதனை அடைந்த அவர் முஸ்லிம் தெருவில் உள்ள தனது பழைய வீட்டிற்கு சென்று வி‌ஷம் குடித்து மயங்கினார். திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News