செய்திகள்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை படத்தில் காணலாம்.

4-வது கட்ட சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

Published On 2021-10-04 09:53 GMT   |   Update On 2021-10-04 09:53 GMT
4-வது கட்ட சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பெரம்பலூர்:

கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 4-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 4-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 198 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 300 இடங்களிலும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

முகாமில் கோவிஷீல்டு, கோேவக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுச்சென்றனர்.

சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் நடந்த முகாமில் ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆதிச்சனூர், சுத்தமல்லி, வெண்மான்கொண்டான், நாயகனைப்பிரியாள், தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபுரந்தான், சாத்தாம்பாடி, முத்துவாஞ்சேரி ஆகிய இடங்களில் கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பூசி பணிகளை கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன், தா.பழூர் ஊராட்சி தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News