செய்திகள்
திருவண்ணாமலையில் டிரான்ஸ்பார்மரில் செடிகளை அகற்றிய போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
திருவண்ணாமலையில் டிரான்ஸ்பார்மரில் செடிகளை அகற்றிய போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஆவாரங்காடு தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 50). இவர் வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று பகலில் அவர் திருவண்ணாமலை அருகே நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சுற்றி இருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.