செய்திகள்
திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் விக்ரம் (வயது25) . இவர் புதுக்கோட்டையில் இருந்து டிராக்டரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு நேற்று காலை திருப்பத்தூர் நோக்கி வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு நிலைதடுமாறிய விக்ரம் ரோட்டோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மான்சிங்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.