செய்திகள்
விபத்து பலி

கோட்டைப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- விவசாயி பலி

Published On 2021-09-24 15:06 IST   |   Update On 2021-09-24 15:06:00 IST
கோட்டைப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). விவசாயி. இவர் தற்போது குடும்பத்துடன் கோட்டைப்பட்டினம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு பின்னர் கோட்டைப்பட்டினம் திரும்பி வந்து கொண்டிருந்தார். கோட்டைப்பட்டினம் பாலம் அருகே வந்தபோது எதிரே கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், காளிமுத்து ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காளிமுத்துவை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பாலத்தில் இரண்டு குழிகள் உள்ளன. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்கள் இந்த குழிக்குள் விட்டு விடுவதால் கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது வரை இந்த பாலத்தில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன. ஆகையால் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தில் உள்ள குழிகளை சரி செய்தால், இந்த விபத்தினை தடுத்து இருக்கலாம் என்று கூறினர்.

Similar News