செய்திகள்
தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
தேவகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே மண்ணன்வயல் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.4 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தாழையூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான 2 வாலிபர்களை பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர் தேவகோட்டை அருகே உள்ள வடுகனி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரசாத் (வயது20) என்றும், மண்ணன்வயல் கிராமத்தில் உண்டியல் திருட்டில் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரியவந்தது.தப்பி ஓடியவர் தேவகோட்டை நடராஜபுரம் ஜெயராமன் மகன் பிரவீன் (27) என தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் பிரவீனை தேடி வருகின்றனர். பிரசாத்தை கைது செய்து தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.