செய்திகள்
கோப்புபடம்

வாலிபர் கொலை: கடன் தொகைக்கு செல்போனை பறித்ததால் கொன்றோம் - கைதான நண்பர்கள் வாக்குமூலம்

Published On 2021-09-17 10:01 GMT   |   Update On 2021-09-17 10:01 GMT
வாசுதேவநல்லூர் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் விஜய் கணேஷ்(வயது 21).

இவர் நேற்று அதிகாலை சிவகிரி அருகே உள்ள கூடலூர் மொட்டை மலை பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுத்த பிரச்சனையில் விஜய் கணேசின் நண்பர்கள் 3 பேர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(21), திருமலாபுரத்தை சேர்ந்த கோபி ஆனந்த்(22), அருளாச்சியை சேர்ந்த மகேந்திரன்(18) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் விஜய் கணேசிடம் அவரது நண்பர் முத்துகிருஷ்ணன் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பி கொடுக்காததால் பணம் தந்த பிறகு வாங்கி கொள்ளுமாறு அவரது செல்போனை விஜய் கணேஷ் வாங்கி கொண்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களான கோபி ஆனந்த மற்றும் மகேந்திரன் ஆகியோர் மூலம் செல்போனில் மொட்டை மலை பகுதிக்கு விஜய் கணேசை அழைத்துள்ளார். அங்கு வைத்து நடந்த தகராறில் 3 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

Similar News