செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்குள் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் அறையில் அண்ணா சிலை மற்றும் கலைஞர் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை பொறுப்பாளர் அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க. அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக பொறுப்பாளர்கள் உத்தரவின் பேரில் உடைந்த சிலைகள் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தி.மு.க. அலுவலத்திற்கு உள்ளே நுழைந்து சிலைகளை உடைத்த மர்ம நபர் குறித்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.