செய்திகள்
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட சாராயம் பறிமுதல் - 3 பேர் கைது
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிக்கல்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் ் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் உள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் சாராயம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் சாராயத்தை காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே புலியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் மகன் தினகரன் (வயது24), நாகை அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த வேலுசாமி மகன் அன்புராஜ்(29), நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பால்சாமி மகன் மாயபிரகாஷ்(31) என தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 330 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.