செய்திகள்
கோப்புபடம்

குடியாத்தம் அருகே பெண் எரித்து கொலை? போலீசார் விசாரணை

Published On 2021-09-09 12:59 GMT   |   Update On 2021-09-09 12:59 GMT
குடியாத்தம் அருகே பெண் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 40) கட்டிட மேஸ்திரி இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த பிரியா வயது 38 என்பவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிளஸ் 1 படிக்கும் மோகன் குமார் வயது 16 என்ற மகனும் 5 வகுப்பு படிக்கும் மாதவி வயது 10 என்ற மகளும் உள்ளனர்.

விஜயனுக்கும் அவரது மனைவி பிரியாவிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் எரிந்த நிலையில் பிரியா பிணமாக கிடந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் மதன்குமார், மகள் மாதவி ஆகியோருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் உடனடியாக பிரியாவின் பெற்றோர் வீடான ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்திற்கு தெரிவித்தனர் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து இரவே கிளம்பி வந்தனர். அவரது அண்ணன் சுரேஷ் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அதிகாலை 4 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பிரியாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியா தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரியாவின் கணவர் விஜயனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News