செய்திகள்
கோப்புபடம்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

Published On 2021-09-09 15:43 IST   |   Update On 2021-09-09 15:43:00 IST
படப்பை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும் என தெரிவித்து செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.விடம் சென்று புகார் தெரிவிக்க போவதாக தெரிவித்தனர்.

Similar News