செய்திகள்
கொள்ளை

காளையார்கோவில் அருகே வங்கி மேலாளர் வீட்டில் ரூ.10 லட்சம்- 30 பவுன் நகை கொள்ளை

Published On 2021-08-20 08:32 GMT   |   Update On 2021-08-20 08:32 GMT
காளையார்கோவில் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காளையார்கோவில்:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பருத்தி கண்மாய் கிராமம் அன்னை தெரசாள் நகரை சேர்ந்தவர் செபஸ்தியான் (வயது 61). ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது மனைவி ஜெயராணி. மகன் ஜான்பீட்டர். இவர் தனியார் வங்கி மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி ஜான்சி கொல்லங்குடி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று காலை ஜான்பீட்டர், ஜான்சி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். ஜெயராணி 100 நாள் திட்ட வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து செபஸ்தியான் மதியம் 12.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் மாலை 3 மணிக்கு ஜெயராணி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.9.75 லட்சத்தை காணவில்லை. வீட்டின் முன்பகுதியில் மறைவாக வைக்கப்பட்டு இருந்த சாவியை மர்ம ஆசாமிகள் எடுத்து கதவை திறந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News