செய்திகள்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சிறப்பு வகுப்பு நடத்தும் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published On 2021-08-19 14:34 IST   |   Update On 2021-08-19 15:29:00 IST
பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைந்ததன் காரணமாக தினமும் 12 சதவீத அளவுக்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை:

சட்டசபையில் இன்று பொது பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லை.

இந்த சூழலில் மாணவர்களை திடீரென பள்ளிக்கு அழைத்து வகுப்புகள் நடத்தினால் பலர் வர விரும்ப மாட்டார்கள். ஆசிரியர்களுக்கும் தயக்கம் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவற்றை திருத்தும் வகையில் மிகச் சிறந்த திட்டமாக ‘கற்பித்தல் வாசிப்பு இயக்கம்‘ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பார்.

இந்த திட்டத்துக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நேரத்துக்குப் பிறகு சிறப்பு வகுப்புகளை நடத்தும் திட்டம் இதுவாகும்.

நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்கு சொந்தமான கட்டிடத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர் கே.அன்பழகன் மாளிகை என்ற பெயர் சூட்டப்படும்.



பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைந்ததன் காரணமாக தினமும் 12 சதவீத அளவுக்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.

இதனால் மத்திய அரசுக்கு தினமும் கூடுதலாக 3.55 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். முதல்-அமைச்சர் செய்த விலை குறைப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருமானம் வரும்.

அனைத்து துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் வர உள்ளன. தரமற்ற கட்டிடங்களை ஆய்வு செய்வதுபோல் பல துறைகளில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. புரிதலுக்கான நடவடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து பல்வேறு விளக்கங்களை அளித்தார்.




Similar News