கடலூரில் த.வா.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர்:
கடலூர் செந்தாமரைநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நகர தொழிற் சங்க தலைவராக உள்ளார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் சுரேசின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த 2 பெட்ரோல் குண்டுகளை சுரேஷ் வீட்டின் வாசலில் வீசினர். அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இந்த சத்தம் கேட்டு சுரேஷ் வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வெளியே வந்து பார்த்தனர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷின் வீட்டின் முன்பு திரண்டனர்.
சுரேஷின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார்செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
தடயவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கபட்டனர். சுரேஷின் வீட்டின் முன்பு பதிவாகி இருந்த கைரேகை, தடயங்களை சேகரித்தனர்.
மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கபட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை சுரேஷ் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக சுரேசின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.