செய்திகள்
பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு 2 வாலிபர்கள் தற்கொலை
பண்ருட்டி அருகே நடந்த வெவ்வேறு சம்பவத்தில் தூக்குப்போட்டு 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள நடுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சிவா(வயது 22). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். மளிகை சாமான்கள் டோர் டெலிவரி கொடுத்த வகையில் வசூலித்த ரூ.40 ஆயிரத்தை சிவா, கடை உரிமையாளரிடம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. எனவே கடை உரிமையாளர் தனக்கு தர வேண்டிய பணத்திற்கு சிவாவிடம் எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த சிவா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(34). இவரது மனைவி கலைவாணி(27). இவர்கள் 2 பேரும் பண்ருட்டி அருகே கோழிப்பாக்கத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கடந்த 6 மாதமாக தங்கி வேலை பார்த்து வந்தனர்.
முருகேசன் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதை கலைவாணி கண்டித்ததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.