செய்திகள்
கோப்புபடம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - புதிதாக 83 பேருக்கு பாதிப்பு உறுதி

Published On 2021-07-17 11:10 GMT   |   Update On 2021-07-17 11:10 GMT
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். புதிதாக 83 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 255 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இவர்களில் கோவை, தஞ்சாவூரில் இருந்து கம்மாபுரம், கடலூர், பண்ருட்டி வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அண்ணாகிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 13 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 64 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியது.

நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் 793 பேர் உயிரிழந்தனர். நேற்று மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டியை சேர்ந்த 59 வயது பெண் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், என்.எல்.சி.யை சேர்ந்த 60 வயது மூதாட்டி சென்னை தனியார் மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும், குமராட்சியை சேர்ந்த 76 வயது முதியவர் நாகை அரசு தனியார் மருத்துவமனையிலும் நோய் பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 560 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 93 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News