செய்திகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கடன்- கலெக்டர் தகவல்

Published On 2021-07-09 16:28 IST   |   Update On 2021-07-09 16:28:00 IST
பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் ‘ஸ்மைல்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் திட்டத்தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று இறந்ததற்கான ஆவணங்களுடன் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News