செய்திகள்
கோப்புபடம்

உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2021-07-08 15:28 GMT   |   Update On 2021-07-08 15:28 GMT
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 32). இவரது மனைவி பரிமளா காந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் காற்றோட்டமான வசதி இல்லாததால் இரவு குடும்பத்தினருடன் அருகிலுள்ள தன்னுடைய பெரியப்பா வீட்டில் சென்று தூங்கி விடுவார்.

நேற்று முன்தினம் இரவு இதேபோல் அசோக்குமார் குடும்பத்தினருடன் பெரியப்பா வீட்டில் சென்று தூங்கினார். அதிகாலை 2 மணி அளவில் பெரியப்பா மகன் மணிகண்டன் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது எதிரே இருந்த அசோக்குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அசோக்குமாரிடம் தெரிவித்தார்.

உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்த அசோக்குமாரின் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

கைரேகை நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News