செய்திகள்
ஊரடங்கில் தளர்வு- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்துக்கு செல்லும் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 63 வருகை மற்றும் 63 புறப்பாடு என மொத்தம் 126 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
கடந்த ஊரடங்கு காலத்தில் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சில விமானங்களில் ஒற்றை இலக்கில் பயணிகள் பயணித்தனர். தற்போது அனைத்து விமானத்திலும் பயணிகள் முழு அளவில் பயணிக்கின்றனர்.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
இதையும் படியுங்கள்...புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்