செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூர் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

Published On 2021-07-03 09:17 GMT   |   Update On 2021-07-03 09:17 GMT
பெரம்பலூர் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகன் படுகாயமடைந்தார்.
குன்னம்:

பெரம்பலூர் அருகே உள்ள அயலூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமாக ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய வீடு உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்களின் மேல் மின்வயரில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வயரில் தண்ணீர் பட்டு மின் கசிவு ஏற்பட்டது. அதனால் இரும்பு குழாய்களில் மின்சாரம் பாய்ந்தது. இரும்பு குழாய்களில் ஏற்கனவே துணி போடுவதற்காக கம்பி கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பியின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையறியாத தங்கராசு, மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து துணியை எடுத்துள்ளார். அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்ததால் அலறினார். இதை அறியாத தங்கராசுவின் மனைவி சித்ரா, மகன் பிரதீப்(18) ஆகியோரும், அவரை காப்பாற்ற கம்பியை பிடித்து உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தங்கராசு சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரதீப்புக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்ராவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News