செய்திகள்
செந்துறை அருகே மனைவியை சுலுக்கியால் குத்தி விட்டு தூக்குப்போட்டு கணவர் தற்கொலை
செந்துறை அருகே மனைவியை சுலுக்கியால் குத்தி விட்டு தூக்குப் போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவரது மனைவி சல்பா (37). இவர்களுக்கு பரத் என்கிற மகனும், பிரியதர்ஷினி என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டிலேயே ஓட்டல் நடத்தி வந்தனர். கடன் பிரச்சினை காரணமாக அதனை மூடி விட்டனர்.
இந்தநிலையில், கடன் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடைேய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தில் வெளியே சென்ற கண்ணன், விஷத்தை குடித்து விட்டு வீ்ட்டிற்கு வந்தார்.
பின்னர், எலியை குத்த பயன்படுத்தப்படும் சுலுக்கியால் மனைவியின் கழுத்தின் பின்பக்கம் குத்தினார். இதில், படுகாயம் அடைந்த அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் சல்பாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில் மனைவியை தாக்கிவிட்டு மீண்டும் வெளியே சென்ற கண்ணன், அங்குள்ள முந்திரி மரத்தில் தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.