செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டினாலும் இடிக்கப்படும்- ஐகோர்ட்டு எச்சரிக்கை

Published On 2021-07-01 01:37 GMT   |   Update On 2021-07-01 01:37 GMT
தரைப்பால கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக அரசும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரெயில்வே தரைப்பாலம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த ரெயில்வே தரைப்பாலத்துக்காக 2 நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் பி.டி.ராம்குமார், தரைப்பால கட்டுமானப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டினாலும் அது இடிக்கப்படும் என்று எச்சரித்தனர். பின்னர், தேசிய நெடுஞ்சாலைத் துறை, ரெயில்வே துறை போன்றவை, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் ஐகோர்ட்டில் தொடரப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவை என்றாலும், அவை இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக நீர்நிலைகளை அழிக்கக்கூடாது என்று கருத்து கூறினர்.

பின்னர், சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது, தரைப்பால கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களுடன் தமிழக அரசும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News