அண்ணா நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மறைந்த பேறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.
அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இன்றைக்கு கிடைத்தது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்துக்கு வருகை தந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்தினேன்.
அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதி இருக்கிறேன். மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை அவர் தம்பிமார்களுக்கு எப்போதும் வழங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர். அதை நினைவுப்படுத்தி குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதி வைத்து அவர் தந்த அறிவுரைப்படி இன்று இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று உறுதியோடு நான் எழுதி இருக்கிறேன்.
கேள்வி:- ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு திட்டங்களுக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா?
பதில்:- நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும் போது நீங்கள் எதிர்பார்ப்பதை போல அந்த செய்திகள் எல்லாம் அதிலே வரும் என்றார்.